Friday, September 18, 2015

என் பார்வை தன்னம்பிக்கைக் கட்டுரைகள் : முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி


எழுத்து சுகமான பேரானந்தம்.எழுதியதை வாசகர்கள் சரியாகப் புரிந்துகொண்டு கொண்டாடத் தொடங்கும்போது அடுத்த பக்கம் எழுதுவதற்கான ஊக்கம் பிறக்கிறது.

நான் தினமலரில் எழுதத்தொடங்கி ஓராண்டாகிவிட்டது. 

இந்த ஓராண்டில் என்னை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுசென்ற அற்புதமான நாட்களை நினைத்துப் பார்த்தால் மனம் மகிழ்வடைகிறது. கல்லூரிவிழா ஒன்றை முடித்துவிட்டு துறையில் இருந்தேன். 


செல்பேசி ஒலித்தது..நான் மதுரை தினமலர் ஆசிரியர் ரமேஷ்குமார் பேசுகிறேன்..என்றவர் என் முகநூல் பதிவுகளைப் பற்றியும் அப்போது வெளியாகியிருந்த வானொலியின் வசந்தகாலம் கட்டுரை குறித்தும் மிகநுட்பமாகப் பேசினார். 

.காலை ஆறுமணிகெல்லாம் அனைத்து நாளிதழ்களையும் வாசித்துவிட்டு முனைவர் ராமசுப்பு அவர்களுடன் அடுத்த நாள் கட்டுரைகள் நேர்காணல்களை எடுப்பது குறித்துத் திட்டமிடுபவர் என அறிந்திருந்தேன்.

 யார் எந்த இதழில் என்ன நல்ல விஷயம் எழுதினாலும் எந்தப் பேதமும் இல்லாமல் உடன் பாராட்டும் இயல்புடையவர் என்று கேள்விப்பட்டேன். என் பார்வை குறித்து விளக்கினார். நீங்கள் என் பார்வைக்கு எழுதலாமே என்று அன்புடன் வேண்டினார். நான் மதுரை தினமலர் எங்கள் நெல்லைக்கு வராது என்று சொன்னேன். 

ஈ பேப்பரில் வருகிறதே என்று சொன்னார். வாசிக்கத் தொடங்கினேன். அத்தனை கட்டுரைகளும் துறைசார்ந்த வல்லுநர்கள் எழுதும் கருத்துக்கருவூலம் என்பதும் நம் தமிழ் மண்சார்ந்த,பண்பாடு சார்ந்த,கலை சார்ந்த,அருமையான நூல்கள் சார்ந்த, கல்வி,சுகாதாரம், உடல்நலம், மனநலம் சார்ந்த, தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகள் தினம்தினம் என் பார்வைக் கட்டுரைகளாக வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். 

நல்ல கருத்தியலை தினமலர் நாளிதழ் முன் வைக்க அரைப் பக்கத்தை ஒதுக்கும்போது நாம் ஏன் எழுதக்கூடாது? என்ற எண்ணம் தோன்றியது. பல நூல்களைப் படித்த ஒரு மனநிறைவை அந்தப்பக்கம் தந்துகொண்டிருக்கிறது.

 காரிருளைப் பழிப்பதைவிட நாம் ஏன் அகல்விளக்காய் அமையமுயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது. சல்லடை போல் நல்லதைவிட்டுவிடாமல் முறம் போல் தூசுதும்புகளை நீக்கி நல்லனவற்றையே வைத்திருப்பவர்களும் இருக்கும்போது, நாம் நம்பிக்கைக் கட்டுரைகளை, வாழ்வியல் கட்டுரைகளை,ஒப்பற்ற தலைவர்களின் உயரிய வாழ்வியலை எழுதலாமே என்று முடிவெடுத்தேன். 

என் கட்டுரை என் பார்வையில் வெளியாகும் அன்று அதிகாலையிலேயே படித்துவிட்டு லண்டனில் இருந்தும் பங்களாதேசிலிருந்தும்,மலேசியாவிலிருந்தும், மதுரை, காரைக்குடி,கொடைக்கானல்,தேனி,ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி என்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரிக்கு வரி வாசித்து என்னைச்  செல்பேசியில் பாராட்டும் அருமையான வாசகர்களை நான் என் வாழ்வில் கண்டது பேரானந்த அனுபவம்.

 வழக்கறிஞர்கள் பேராசிரியர்கள், இல்லத்தரசிகள், வணிகம் செய்பவர்கள், அன்றாடம் உழைத்து வாழும் தொழிலாளர்கள் வாழ்த்துகளைத் தந்து பாராட்டுவோரின்  அன்பால் என் கட்டுரை வெளிவரும் நாள் மிகநிறைவான  நாளாகவே இன்றும் அமைகிறது. 

கட்டுரைக்குக் கீழே செல்பேசி எண்ணையும் தந்துவிடுவதால் உடனுக்குடன் என் எழுத்து குறித்த பலதரப்பட்ட விமர்சனத்தை என்னால் அறிந்து கொள்ளமுடிந்தது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டிற்காக மலேசியா சென்றபோது தினமலர் அறிமுகத்தில் நண்பர்கள் பலரையும் சந்த்தித்தேன்.

 நல்லவற்றை அழகாக நயமாக நாம் சொல்லும் விதத்தில் சொல்லவேண்டிய ஊடகத்தில் சொன்னால் உறுதியாக பலன் விளையும் என்பதை என் பார்வை இன்றும் வெற்றிதீபமாக விளக்கிக்கொண்டே இருக்கிறது. 

2014 ஆம் ஆண்டின் இறுதிநாள் கல்லூரியில் இருந்தபோது தினமலர் அதிபர் முனைவர் ராமசுப்பு அவர்கள் செல்பேசியில் பேசினார்கள். இதழியல் துறையில் சாதனை படைத்து முனைவர் பட்டம் பெற்றுவருமான முனைவர் ராமசுப்பு அவர்கள் செல்பேசியில் பேசினார்கள். 

புத்தாண்டில் மலர்வோம் புதுமனிதராய் என்கிற என் கட்டுரையைப் படித்துவிட்டு வரிக்குவரி பாரட்டினார்கள்.

 புத்தாண்டு அன்றுதானே வரும் என்று நினைத்துக் கொண்டிருத்தபோது முந்தைய நாளே வெளியிட்டுவிட்டீர்களே என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே அவர்  சொன்னார் நாளை நம் முன்னாள் சனாதிபதியின் கட்டுரை வெளியாகிறது என்றார், மறுநாள் என் பார்வையில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் கட்டுரை வெளிவந்தது.

 சனாதிபதியாய் இருந்தவரின் கட்டுரை வருவதற்கு முந்திய நாள் அதே என் பார்வையில் என் கட்டுரை வந்தது என் பேறு. அதுமட்டுமல்லாமல் என் பார்வையை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொடர்ந்து வாசித்து வருகிறார் என்ற செய்தியும் எனக்கு இன்னும் கவனமாகவும் தரமாகவும் எழுதவேண்டும் என்றும் நினைக்கத்தூண்டியது. 

தன்னம்பிகைக் கட்டுரைகள் இளையோரிடம் பெரும்வரவேற்பைப் பெற்றது.அனைத்து வாசகர்களும் உடன் நூலக மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருகின்றனர்.

பாரதப் பிரதமரிடம் சிறந்த கட்டுரையாளருக்கான சத்பவனா தேசியவிருதை நான் கல்லூரியில் படித்த காலத்தில் பெற்றிருக்கிறேன்..

ஆனால் அதைவிட உயர்ந்த விருது ,என் பார்வை கட்டுரை மிக நன்றாக வந்திருக்கிறது  என்று சொல்லும் முகம்தெரியாத வாசகரின் நல்வாழ்த்து.பாரதியில் தொடங்கிய என் பார்வை பயணம் எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டுக் கட்டுரையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.






















தொடர்ந்து அன்பால் அனைவரையும் தன்பால் ஈர்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் திரு.ஜி.வி.ரமேஷ்குமார் அவர்களுக்கும் அதிபர் முனைவர் ராமசுப்பு அவர்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
 
                                       அன்புடன்
                                      சௌந்தர மகாதேவன்