Sunday, March 22, 2015

குறையொன்றுமில்லை..”- சிரமம் தாண்டிய சிகரங்கள்..




பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
திருநெல்வேலி
9952140275

காலம் அவிழ்த்துப் போடும் புதிர் விந்தையாகத்தான் இருக்கிறது. கண் வலிக்காரர்களைக் கண்டவுடன் ஒதுங்குகிற நாம் அவநம்பிக்கைக்காரர்களை அருகில் வைத்திருக்கிறோம்.

அவநம்பிக்கையைப் புறந்தள்ளி நம்பிக்கையின் அடையாளமாய் திகழும் சிரமம் தாண்டிய சிகரங்கள் சிலரை இந்த நாளில் நினைப்பது இனிமையானது.

 அனைத்து உறுப்புகளும் பெற்றிருந்தும் மனவலிமையில்லாதவர்களுக்கு மத்தியில் ஓரிரு புலன்கள் அதன் பணியைச் செய்யாவிட்டாலும்கூட மனஉறுதியோடு மாற்றுத்திறனை வளர்த்துக்கொண்டு சாதனையாளர்களாய் தடம்பதித்து வரலாற்றில் இடம்பிடித்த மாற்றுத்திறனாளிகள் மகத்தான சாதனையாளர்கள்; பிரியத்தைப் பிரியமாகப் புரியவைப்பதில்தான் வாழ்க்கை வாழ்கிறது.வாழ்வில் பிரியம் வைத்து தடைகளை உடைத்தெறிந்தவர்களின் வாழ்க்கை நமக்கு நம்பிக்கை தருகிறது.

இலக்கியம் படைத்த இரட்டைப் புலவர்கள்
..............................................................................................
எண்ணம் கிண்ணம் போன்றது, ஊற்றியதை ஏற்றுக்கொள்ளும் அப்படியே! தன் வடிவத்தில்.ஒருவர்கண்களால் மற்றவர் பார்த்து,ஒருவர் கால்களால் மற்றவர் நடந்த அதிசயம் நடந்தது அவ்விருவர் வாழ்விலே.. சோழ நாட்டில் பிறந்த இளஞ்சூரியர்,முதுசூரியர் எனும் இருபுலவர்கள் தில்லைக் கலம்பகம் உள்ளிட்ட அரிய இலக்கியங்கள் படைத்த சாதனையாளர்கள்..நினைத்தவுடன் கவிபாடும் ஆற்றல் மிக்கவர்கள்.

இவர்களில் ஒரு புலவருக்குப் பார்வைத்திறன் கிடையாது,மற்றொரு புலவருக்கு நடக்க இயலாது.நடக்கஇயலாத புலவரைக் கண்பார்வைத்திறனற்ற புலவர் தூக்கித்தன் தோள்களில் வைத்து மேலே அமர்ந்தவர் பார்த்துச் சொல்லும் திசையில் நடப்பாராம்.இருபுலவர்களும் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள்.நடக்கஇயலாதவர் செய்யுளின் முதலிரு அடிகளைப் பாட கண்பார்வையற்றவர் அவர் பாடியதைக் கேட்டு சரியாக அச்செய்யுளைப் பாடிமுடிப்பாராம்.ஒருவர் புலன்களை மற்றவர் பயன்படுத்தி இறவா இலக்கியங்களைப் படைத்தது சாதனைதானே.

இசைமேதை பீதோவன்
.....................................................
உலகின் மிகப்பிரபலமான இசைமேதையாகத் திகழ்ந்த பீதோவன்,மிகக் கடினமான சிம்பனியில் பாடலையும் சேர்த்து ‘கோரல் சிம்பனியை’ உருவாக்கி லட்சக்கணக்கான இசைரசிகர்களின் காதுகளைக் கவுரவப்படுத்தியபோது அவர்களின் கைதட்டலைக்கூடக் கேட்கத் திறனற்றவராக மாறியிருந்தார்.

குடித்துவிட்டு அடித்துத் துன்புறுத்திய தந்தை,கண்ணெதிரே இறந்துபோன சகோதர்களின் இறப்பு,குடும்பத்தின்  கடன்சுமை,காதல் தோல்வி போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் பீதோவனை மூர்க்கத்தனமான மனிதராய் மாற்றின.நிம்மதிதேடி அவர் விரும்பிச்செய்த செயல்கள் அவர் உடல்நலத்தைக் கெடுத்துக் காதுகளின் கேட்கும்திறனைக் கெடுத்தன.உலகமே போற்றிய சிம்பனி இசைக்கோர்வையை உருவாக்கியவரே அதைக் கேட்கமுடியாவிட்டாலும் உலகம் இன்றும் பீதோவனைப் போற்றுகிறது மகத்தான மாற்றுத்திறன் கொண்ட இசைமேதையாக.

குமரகுருபர சுவாமிகள்
....................................................
ஐந்துவயது வரை வாய்பேசா சிறுவராக திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊரில் வாழ்ந்து, திருச்செந்தூர் திருமுருகன் திருவருளால் பேசும்திறன் பெற்று கந்தர்கலி வெண்பா,கயிலைக் கலம்பகம்,மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்,நீதிநெறி விளக்கம்,முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்,சகலகலாவல்லிமாலை போன்ற பதினைந்து நூல்களைத் தந்த குமரகுருபர சுவாமிகள் ஒப்பற்ற சாதனையாளர்.

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணா யினார்
 
சாதனையாளராய் மலரவேண்டுமானால் உடல்வருத்தம் பாராமல்,பசியைக்கூட நினைத்துப் பார்க்காமல், தூங்காமல்,தனக்கு யார் எந்தத் தீமை செய்தாலும் அதைப்பற்றி எதுவும் எண்ணாமல்,பாராட்டியோ விமர்சித்தோ சொல்லப்படும் செய்திகளைப் பெரிதாய் கருதாமல் தன்பாதையில் துணிவுடன் பயணிக்கவேண்டும் என்ற அருமையான பாடலை ‘நீதிநெறி விளக்கம்’ நூலில் தந்த ஒப்பற்ற சாதனையாளர் குமரகுருபர சுவாமிகள்.

தாமஸ் ஆல்வா எடிசன்
......................................................
மூளைவளர்ச்சிக் குறைந்தவரென்றும்,காதுகேட்கும் திறனற்றவரென்றும் பள்ளியில் ஆசிரியர்களால் குறைசொல்லப்பட்ட  தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவன்,ஏழுவயதில் ஏற்பட்ட உள்ளெழுச்சியால் 1093 பொருட்களைக் கண்டறிந்து உலகம் போற்றும் மகத்தான அறிவியல் மேதையாக மாறியது விடாமுயற்சியாலும் தொடர்பயிற்சியாலும்தான்.எட்டரை வயதில் பள்ளிக்குச் சென்றவரை ஆசிரியரின் சுடுசொற்கள் பள்ளிப்படிப்பை நிறுத்துமளவு கடுமையாய் பாதித்தது.

வீட்டில் தன் தாயாரிடம் கற்றகல்வி புதுமையான கண்டுபிடிப்புகளில் நாட்டம் கொள்ளுமளவிற்கு தன்னம்பிக்கை உடையவராய் மாற்றியது.நீயூட்டனும்,பாரடேயும் சிறுவயதில் அவரை நூல்கள் மூலம் வந்தடைந்தார்கள்.ரயில் நிலையத்தில் செய்தித்தாள்போட்டு சம்பாதித்த பணத்தை ஆய்வுப் பயன்படுத்தினார்.தானாக இயங்கும் தந்திப்பதிவுக்கருவி,கிராமபோன்,மின்விளக்கு, போன்ற சாதனங்களைக் கண்டறிந்தார்.மூளைவளர்ச்சிக் குறைந்தவரென்றும் செவித்திறன் குறைந்தவரென்றும் இகழப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் 84 வயதில் காலமானபோது உலகநாடுகள் மின்விளக்கை அணைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தின.

சாதனைப் பெண்மணி ஹெலன் ஹெல்லர்
.................................................................................................
எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாகத்தான் பிறந்தது,ஒன்றரை வயது வரை எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாக வளரத் தொடங்கியது.திடீரென்று ஒரு நாள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாய் பேசமுடியாது,காதுகேட்கும் திறன் இல்லாமல் போனது.வளரவளரத் தன் தேவைகளைக் கூட அடுத்தவர்களிடம் தெரிவிக்கச் சிரமப்பட்டது.

எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில் அந்தக் குட்டிதேவதை மீது அன்பைச் செலுத்த ஆசிரியர் வடிவில் ஆன் சல்லிவன் வந்தார்.சிறப்புக்கல்வியை அந்தக் குழந்தைக்குப் பொறுமையாய் தந்தார்.இடதுகையில் பொம்மையைத் தந்து வலதுகையில் ஆட்காட்டிவிரலால் “பொம்மை” என்று எழுதினார்.உச்சரிக்கும்போது உதட்டில் விரலை வைத்து உச்சரிப்பின் அதிர்வை உணரவைத்தார்.பேச்சுப்பயற்சி தந்தார். 

ஆன் சல்லிவனின் விடாமுயற்ச்சியால் அந்தக் குழந்தை வளர்ந்து ஹெலன் ஹெல்லர் என்ற பெயரில் எல்லா மேடைகளிலும் பேசினார்.செவித்திறன் குறைந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சாதனையாளராய் உருவாக்கினார்.

எவரெஸ்ட் சிகரம்தொட்ட அருணிமா சின்ஹா
.......................................................................................................
 “சிகரத்தை அடைய எங்கிருந்து பயணத்தைத்தொடங்கவேண்டும்?” என்று தன் குருவிடம் கேட்டான் சீடன்,உடன் அவர்,” சிகரத்தை அடையவேண்டுமானால் சிகரத்தின் உச்சியிலிருந்து தொடங்கவேண்டும் என்றார் குரு.அது எப்படி குருவே ? என்றான் சீடன்.”சீடனே! நீ எப்போது சிகரத்தை அடையவேண்டும் என்று நினைத்துவிட்டாயோ அப்போதே உன் மனம் சிகரத்தை அடைந்துவிட்டது.ஏறிநடந்து நீ இரண்டாம் முறையாய் சிகரம் தொடுகிறாய்” என்றாராம்.

தேசிய அளவில் சாதித்த கைப்பந்து வீராங்கனை அருணிமா சின்ஹா,லக்னோவிலிருந்து புதுடெல்லிக்கு தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்;சற்றும் எதிர்பாராத வகையில் ரயில்கொள்ளையர்கள் வண்டியில் ஏறிப் பயணிகளிடம் நகைகளைக் கொள்ளையடிக்க அவர்களை எதிர்த்து வீரத்துடன்போராட அவர்கள் அருணிமாவை ஓடும்வண்டியிலிருந்து வெளியே வீச அடுத்த தன்டவாளத்தில்  சென்றுகொண்ருந்த ரயில் வண்டியில் சிக்கித் தன் ஒருகாலை இழந்தார்.ஆனாலும் மனம்தளராமல் மூச்சுப்பிடித்து முன்னேறி 25 வயதில் ஒற்றைக்காலில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார் உத்தரப்பிரதேசத்தின் இலட்சியப் பெண்மணி அருணிமா சின்ஹா. ஆம்! காலை இழந்தாலும் அவர் நம்பிக்’கை’யை இழக்கவில்லை.


ஆணியில் தொங்கும் அப்பாவின் சட்டை அவரை அப்படியே ஞாபகப்படுத்துவதைப் போல் நம்பிக்கை எனும் ஒற்றைச்சொல் நம்மை செயற்கரிய செயல்கள் செய்ய அழைத்துச் செல்கிறது. நீரெழுச்சியைப் போல் பேரெழுச்சியோடு பயணப்படவேண்டிய நேரத்தில்; தயக்கத்தைத் தள்ளி நிறுத்துவோம்.எதுவும் குறையில்லை..எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் விட்டு விடுதலையாகிப் பறப்போம் சிட்டுக் குருவிகளாய் ...விரிவானம் வெளியே காத்திருக்கிறது.
*
கட்டுரையாளர் பாரதப்பிரதமரிடம் தேசியவிருது பெற்றவர்.







வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை



               இமயம் ஏறலாம் வா இளைஞனே!

பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி



* இந்தியாவின் இளையதூண்கள் இளைஞர்கள், சாதனை எனும் சொல்லின் நிகழ்கால நிஜங்கள் இளைஞர்கள். வெந்நீர் நிரப்பிய தவலைப் பானை மாதிரி கவலைப் பானையில் கண்ணீர் நிரப்பித் திரியும் பழக்கம் இளைஞர்களுக்கு இல்லை. துள்ளித்திரியும் கவலையற்ற காளைகள் அவர்கள். 

விழியுமில்லை ஒளியுமில்லை ஆனாலும் இருட்டிலும் இயங்குகிறதே வவ்வால்! நினைத்ததை முடித்துக்காட்டும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஒரு பறவையின் பரந்துபட்ட ஆகாயத்தைப் போல் விரிந்து கிடக்கும் விரிவானில் வலம்வரும் பட்டாம் பூச்சிகள் அவர்கள்.  இயக்கத்தின் அடையாளம் இளைஞர்கள் . 


* நினைவு என்னும் நெடுவனத்தில் மலர்களும் இருக்கும் மலைப்பாம்புகளும் இருக்கும், தடைகளை இன்முகத்துடன் ஏற்றுத் தாண்ட முயன்ற இளைஞர்களையே வரலாறு வரவில் வைத்திருக்கிறது. சிகாகோ மாநகருக்குச் சென்று “சகோதர சகோதரிகளே!”  என்ற இரட்டைச் சொற்களால் இந்தியப் பண்பாட்டின் உன்னதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லி, இந்தியா பற்றிச் சிந்தியாதவர்களையும் தன்னைச் சந்திக்க வைத்துவிட்டுக் கப்பலேறிய கம்பீரமான இளைஞர் சுவாமி விவேகானந்தரின் விந்தை சாதாரணமனதா?

* சாதாரண தோல்விகளுக்கும் சதாரணமாகிப் புலம்பும் இளையோர் கூட்டமாக இளைய சமுதயத்தை ஏன் சொல்லவேண்டும்? சுதந்திரப்போரின் தீயாகதீபங்களைக் கொடூரமாய் துன்புறுத்திக் கொடுமைப்படுத்திய ஆஷ் எனும் ஆங்கிலேய அதிகாரியை, மணியாச்சி ரயில்நிலையத்தில் துணிச்சலாய் சுட்டுக்கொன்றுத் தன் இன்னுயிரையும் தந்த வீர்வாஞ்சிநாதன் எனும் இளைஞர் அநீதியை அழித்த அக்கினிக் குஞ்சாயிற்றே! 

* சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக விளங்கிய சகோதரி நிவேதிதா, பாரதி எனும் இளைஞரின் உள்ளுக்குள் ஒளிந்திருந்த அக்கினிக் குஞ்சைச் சொற்களால் கூர்தீட்டிச் சாதனைவானில் சிறகடிக்க வைத்த இளையதீபம். 1905 இல் பாரதி,சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தான். “பாரதத் தாய் உன் கண் எதிரே கையில் விலங்கோடு நிற்க, நீ உடைத்தெரியாமல் நிற்கலாமா பாரதி!” என்று சினத்தோடு அவர் வினவ 23 வயதேயான இளையபாரதி சிலிர்த்தெழுந்தான்; ”சொல்லுக்கடங்காவே பராசக்தி, சூரத்தனங்களெல்லாம் வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம்” என்று தேசம் காக்கத் தெய்வத்திடம் பாரதி வல்லமை வேண்டினான். பாரதிக்கு சகோதரி நிவேதிதா மகத்தான இளைய சக்தியாகப் புலப்பட்டார். பிரகாசமான முகத்தோடு உறுதியோடு பேசிய சகோதரி நிவேதிதாவிடம் பேசியபின் பாரதியின் தன்னம்பிக்கை இன்னும் கூடியது.சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து உபதேசம் பெற்ற நிகழ்வையும், அவரிடம் பெற்ற ஞானதீட்சையைத் தன் இறுதிக்காலம் வரையிலும் சக்தியாய் பாரதி மனதில் தேக்கிவைத்திருந்தார். ஒருதீபம் இன்னொருதீபத்தை ஏற்றிவைத்து அடையாளம் காட்டிய விந்தை அன்று நிகழ்ந்தது.


* எண்களைக் கண்களாய் கருதி, எண்கோட்பாடுகளையும் செறிவெண் கோட்பாடுகளையும் உலகின் பார்வைக்குக் கொண்டுசென்ற ஒப்பற்ற இளைய கணிதவியல் சாதனையாளர் சீனிவாச ராமானுஜம் என்ற இந்த உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்தான். வாழ்கிற வருடங்களுக்கும் சாதித்தலுக்கும் சம்பந்தமில்லை என்று சப்தமாய் சொல்லிச் சாதிக்கிறவர்கள் இளைஞர்கள்.

* வாழ்வை அறுத்தெறியும் வாளல்ல வாழ்வு.நெஞ்சம் நினைத்தால் பஞ்சுபோல் லேசாகி வானையும் எட்டலாம்! சாதனை வானிலும் பறக்கலாம் என்று காட்டிய அந்த இளம்சாதனையாளர் நம்மை வியக்க வைக்கிறார்; உள்ளிருந்து இயக்கவைக்கிறார் “ எங்களால் சாதனை செய்து சிறக்கவும் முடியும், இளம் வயதில் கேப்டனாய் பறக்கவும் முடியும்” என்று 16 வயதில் விமானம் ஓட்டும் பயிற்சியைத் தொடங்கி,  18 வயதில் விமான ஓட்டியாய் உரிமம் பெற்று, 21 வயதில் இளைய கமாண்டராய் பொறுப்பேற்று 2100 மணிநேரம் விமானம் ஓட்டி, லிம்கா சாதனையாளர் பட்டியலில் “உலகின் இளம்விமானக் கேப்டன்” எனும் சிறப்பினைப் பெற்ற சாதனைப் பெண்மணி பவிகா பாரதி இளைஞர்களின் முன்னேற்ற முன்மாதிரி. 

* ஆம் ! எழுதாத பேனாவை எவர்தான் பையில் வைத்திருப்பார் ? ஆறிப்போன தேநீரை யார்தான் விரும்புவார் ? சூடுதான் தீர்மானிக்கிறது உயிர்மையின் உன்னதத்தை இயங்கிக்கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தையே உலகம் உள்ளபடி விரும்புகிறது. வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை.

*  தடையாளக் கற்றுக்கொள்வதுதான் வெற்றியின் முதல்படி.முருங்கையை முறிக்க ஒருகை போதும்,ஆனால் தேக்கை முறிக்கப் பலகரங்கள் வேண்டும். ஒற்றுமையின் அடையாளம் இளைய சமுதாயம்.

* சிக்குப்பட்ட நூல்கண்டே நம்மைச் சிரமப்படுத்துகிறது, சிக்கலில் தவிக்கும் மனமே நம்மைக் கலவரப்படுத்துகிறது. இளைத்துப் போவதோ,தோல்வி கண்டு களைத்துப் போவதோ இளைய சமுதாயத்தின் பண்புகள் இல்லை.

* வழுக்கிவிழாமல் வாழ்க்கை இல்லை,விழுந்து எழாதவன் வீரனுமில்லை என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். தேக்கிலை போல் பரந்துவிரிந்திருக்கிறது இந்த வாழ்வெனும் பூங்காவனம்.அதில் மலர்ந்து விரியும் வாசமலர்கள், நிகழ்காலத்தின் பாசமலர்கள் அவர்கள்.

* அன்பு இளைய சமுதாயமே! நீங்கள் காலத்திற்காக காத்திருக்க வேண்டாம்,சில நேரங்களில் சிலருக்கு; அவர்கள்காலமான பின்தான் காலமே வருகிறது. காலத்தைவிஞ்சி நாம்செய்யும் செயல்களே நம்மைப் பலகாலம் கடந்தும் வாழவைக்கிறது. 

* இந்தச் சமுதாயம் சில கணங்களில் உங்களை ஓரங்கட்டுவதற்காக நீங்கள் துயரப்பட வேண்டியதில்லை

. கலங்கரை விளக்குகள் கரையோரமாகத்தானிருக்கும். மைல்கற்கள் நாம் கடக்கவேண்டிய தூரத்தை அமைதியாய் தெரிவித்தபடி சாலையோரமாகத்தான் இருக்கும்.

 காலத்தைவிட வேகமாய் இயங்குகிறவனை,மூச்சுப் பிடித்து முன்னேறுகிறவனின் முயற்சியை யாராலும் முறித்துப்போட்டுவிட முடியாது. 

* வளையோர் சூடார்,இளையோர் தேடார் ஆனாலும் எழுச்சியோடு பூக்கவில்லையா எருக்கம் பூக்கள்? முள்ளுக்கு அருகிலும் முனைப்போடு பூத்திருக்கும் ரோஜாக்கள் மாதிரிச் சவால்களுக்கு மத்தியிலும் சந்தோசமாய் பூத்துக்குலுங்குங்கள்.

* வாழ்வின் யதார்தத்தைக் ஏற்றுக்கொள்ளுங்கள், தோல்விகளையும் இன்முகத்தோடு பெற்றுக்கொள்ளுங்கள்.வருத்தப்படுவதற்காகவோ தோல்வியின் வாசலில் நிறுத்தப்படுவதற்காகவோ நீங்கள் பிறக்கவில்லை என்பதை உணருங்கள்.

* அண்டவிடாதிருங்கள் அவநம்பிக்கை எனும் காலக்கரையானை.. அனுமதித்தால் அரித்துவிடும் அனைத்தையும் அடியோடு.  சிந்தித்துப்பாருங்கள் நம்மை நிந்தித்தவர்களும் நிச்சயம் நம்மை   இயங்கத்தூண்டி நமக்கு நல்லது செய்தவர்கள்தான். ஆகவே எதிரிகள் குறித்து எரிச்சலடையவேண்டியதில்லை.

* *உயரத்தூண்களே நீங்கள் துயரத்தூண்களாக ஒருநாளும் மாறவேண்டாம்! 

  விருப்பதோடு செய்யும் செயல்களே நம் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் திசைகளைத் தீர்மானியுங்கள் வானம் வசப்படும்.  நெருப்பை உள்வாங்கும் வைக்கோற்போர் நெடுநேரம் எரிகிற மாதிரி வெறுப்பை உள்வாங்கும் மனம் வெந்துதணியும் அனல்வனமாகிறது.

 யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரத்தம் தேவைப்படும் போது இளையோர் உலகம்தான் இன்றும் எந்தப்பேதமும் பாராமல் ரத்ததானம் செய்துவருகிறது.மனிதநேயத்தின் வாழும் சான்றுகளாக இளையபாரதம் திகழ்வது எத்தனை அற்புதமானது! ஆகவே! இனி திட்டாதீர்கள் அந்தத் தீர்க்கத்தரிசிகளை.அவர்களுக்கு வாய்ப்புகள் தந்து ஊக்கப்படுத்துங்கள்..காரணம் அவர்கள் உன்னதமானவர்கள்.

குன்றென நிமிர்ந்து நிற்கும் மகாகவிஞன் பாரதி



முனைவர் சவுந்தர மகாதேவன்
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி],
திருநெல்வேலி
mahabarathi 1974@gmail.com
99521 40275
“கேட்டிலுந் துணிந்து நில்” மகாகவி பாரதியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.அந்த மகா கவியை வெளுப்பதற்காகக் காலம் அவனைத் துவைத்தெடுத்து கிழிக்கமுயன்று இறுதியில் தோற்றுப்போனது.சிதையா நெஞ்சுகொள் எனும் சூத்திரமே பாரதியின் வாழக்கை நமக்கு வழங்கும் பாடம்.
 பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப்புயலை எதிர்கொண்டவர் வேறுயாரும் இருக்க முடியாது.வறுமை எனும் உளியால் செதுக்கப்பட்ட கலைச்சிற்பம் மகாகவி பாரதியார்.
வறுமையும் வெறுமையும் விடாது துரத்தியபோதும் அஞ்சாமல்  அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்..நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.
“நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி-எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”
பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில் கழிந்தன.ஆனாலும் பாரதியிடம் என்றும் சோர்வில்லை,மனக்கலக்கமில்லை.மாநிலம் பயனுற மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.
தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை, சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது.
தாயின் இறப்பு
.................................

எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார்.
பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.
“என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்கவிட்டு விண் எய்திய தாய்        (சுயசரிதை: 20)
1889 ஆம் ஆண்டில் பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் வள்ளியம்மாள் எனும் மங்கையை மறுமணம் செய்கிறார்.

ஓடிவிளையாடாத பாரதிக் குழந்தை
...............................................................................
பாட்டி பாகீரதியின் அன்பும் தாய்வழிப்பாட்டனார் ராமசாமிஐயரின் அன்பும் பாரதியைச் செழுமைப்படுத்தின.பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசைஇருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப்  வருத்ததோடு பதிவு செய்துள்ளார்.ஓடிவிளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொன்ன பாரதி ஓடியாடவில்லை,பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் பாரதியை ஓடியாடவிடவில்லை
ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
    
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத்து ஏறிஇ றங்கியும்
    
என்னொடுஒத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
    
வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,
தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
    
தோழமை பிறிதின்றி வருந்தினேன்
(சுயசரிதை: 4)

தோழமை ஏதுமின்றி வருந்தியே அவர்தம் குழந்தை நாட்களைக் கழித்துள்ளார்.அதனால்தான் கூடிவிளையாடு பாப்பா என்று பாடினார்.

பெருஞ்செல்வம் இழந்த தந்தை
.......................................................................
பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் தொடங்கிய காட்டன் ஜின் பாக்டரி செயல்படமுடியாத நிலையில் வறுமை ஆட்டிப் படைத்தது.கையில் வைத்திருந்த பணத்தை ஆங்கிலஅரசின் சதியால் தன் தந்தை இழந்ததைப் பாரதி துயரத்துடன் பதிவு செய்கிறார்.
“ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியிலிழந்தனன்”



ஏழுவயதில் பாரதி பட்டம்
.........................................................
யாருக்கும் அடங்காத காட்டாறு பாட்டாறாய் உருவெடுத்தது.கலைமகள் கவிமகளாய் பெருக்கெடுத்தாள்.ஏழுவயதில் கவிபுனையகூடிய ஆற்றல்பெற்றிருந்த சுப்பையாவுக்கு எட்டயபுர அரண்மனையில் 1893 ஆம் ஆண்டு சிவயோகியார் தலைமையில் புலவர் குழு ‘’பாரதி’’ என்ற பட்டத்தை வழங்கியது.
அன்று முதல் சுப்பையா சுப்பிரமணிய பாரதியானார்.இத்தனைத் திறன்களைத் தன்னகத்தே பெற்ற அருமை மகன் சுப்பிரமணிய பாரதியை இன்னும் உயர்த்திப் பார்க்க சின்னச்சாமி அய்யர் ஆசைப்பட்டார். திருநெல்வேலி ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி அவர் நினைவுக்கு வந்தது.
திருநெல்வேலி டவுண் தெற்குப்புதுத்தெருவில் 1859 ஆம் ஆண்டு ஆங்கிலமும் தமிழும் ஒன்றாகக் கற்க சைவப்பெருமக்களால் தொடங்கப்பட்ட ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி, பின்நாளில், 1861 ஆம் ஆண்டு தற்போதுள்ள திருநெல்வேலி சந்திப்புக்கு அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு இந்துக் கலா சாலை  என்று பெயர் மாற்றம் பெற்றது.
மகாகவி பயின்ற பள்ளி
......................................................
 எட்டயபுரத்தில் மகன் சுப்பையா இருந்தால் வறுமை மிகவும் பாதித்துவிடும் என்பதால் பாரதியைத் திருநெல்வேலியில் உள்ள ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி என்ற பெயரில் அன்றும், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி என்று இன்று அழைக்கப்படும் ம.தி.தா இந்துக் கல்லூரிப் மேல்நிலைப்பள்ளியில் சின்னசாமி கொண்டு சேர்க்கிறார்.
இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் மகாகவி பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை.மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ‘’பள்ளிப் படிப்பினிலே-திபற்றிட வில்லை’’ என்ற வரி கவனத்திற்குரியது.
மூன்று காதல் என்ற தலைப்பிட்டு சுதேச மித்திரன் (13-10-1916) இதழில் பாரதி எழுதிய பாடல் தனித்துவம் வாய்ந்தது. சரஸ்வதி என்ற தலைப்பில் ,

“பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா!
என்று பாரதி எழுதியுள்ள பாடல்வழி,பாரதியின் இயற்கை நாட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.வரையறை கடந்த கவிக்கருவறை பாரதியின் உள்ளம்.அதனால்தான் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர்த் துளியாய் எதன்மீதும் ஒட்டுதலில்லாமல் வாழ முடிந்தது.
பாரதி விரும்பா ஆங்கிலக்கல்வி
.......................................................................
தமிழின் மீதும் தமிழ்இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக்கல்வியை ஏற்க முடியவில்லை.எட்டயபுரத்தில் இருந்த கல்விபயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது.தந்தையின் வறுமை அவரை அரித்தது.மனம் நிம்மதி இழந்து தவித்தது
செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
    
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
    
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!
-சுயசரிதை
பொருளில்லாக் கல்வியாய் பாரதிக்கு அக்கல்வி தெரிந்தது.
உதவி கேட்டு எழுதிய சீட்டுக்கவி
..........................................................................
.”பெரிதினும் பெரிது கேள்” என்று புதிய ஆத்திசூடி படைத்த பாரதி பள்ளிப்படிப்பிற்கு உதவிகேட்டு மன்னருக்குக் கடிதம் எழுதிய நிலையைக் காலம் ஏற்படுத்தியது.
சனவரி 24,1897 ஆம் ஆண்டு தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்பமுடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக பாரதியே அனுப்பி வைத்தான்.
‘’கைப்பொருளற்றான் கற்பதெவ்வகை?
பொருளானன்றிக் கல்வியும் வரவில
கல்வியானன்றிப் பொருளும் வரவில
முதற்கட் கல்வியே பயிறல் முறைமையா
மதற்குப் பொருளிலையாதலினடியேன்
வருந்தியே நின்பால்வந்தடைந்தனன்’’
கல்வி பயில்வதற்குப் பெரும்பொருள் இருத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி’’ஊழியன் இளசை சுப்பிரமணியன்’’ என்ற பெயரில் பாரதி வரைந்த சீட்டுக்கவி அன்றைய நிலையின் படப்பிடிப்பு..
அப்போது பாரதியார்  ந்தாம்படிவம் அதாவது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்.
திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார்.புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.
குழந்தைத் திருமணம்
.................................................
1897 ஜூன் 27 பதினைந்துவயது ...பாரதிக்கும் கடையத்தில் வசித்த செல்லப்பாஐயரின் மூன்றாம்பெண்குழந்தை செல்லம்மாவுக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடித்தவுடன் பாரதி பள்ளிக்குச் செல்லத்தொடங்கிவிட்டார்.
தந்தையின் மரணம்
............................................
1898 ஜூலை 20 ஆம் நாள் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள்.பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் மரணமடைகிறார்.
பள்ளிப்படிப்புத் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு பாரதியின் பாட்டி பாகீரதிஅம்மையார் குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள் இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்த அரிய செய்தியை வரலாற்றாசிரியர் செ.திவான் ‘’பாரதி செல்லம்மாள் உயில்’’ என்ற நூலில் பதிவு செய்கிறார்.

பாட்டியின் மனஉறுதி
................................................
பாரதியின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்தாவது படிக்க வைக்கவேண்டும் என்று போராடிய பாரதியின் பாட்டி பாகீரதிஅம்மையாரின் மனஉறுதியை என்ன சொல்வது?
காசி வாழ்க்கை
....................................
திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்த பாரதியை 1898 ஆம் ஆண்டு காசிக்கு அழைத்ததும் ,தங்குவதற்குத் தன் வீட்டில் இடம்தந்து காசி ஜெய்நாராயண கலாசாலையில் பாரதி பள்ளிப்படிப்பைத் தொடர்வதற்கும் காரணம் பாரதியின் அத்தை குப்பம்மாள்தான்.
திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.
தோல்வியிற் கலங்கேல்
.....................................................
மகாகவி பாரதி சிறுவயதில் நிறைய சவால்களை எதிர்கொண்டார்.
சிறுவயதில் தாயை இழந்து திருநெல்வேலியில் பள்ளிப்படிப்புக்குக் கூடத் தந்தையால் பணஉதவி செய்யமுடியா நிலையில் எட்டயபுரம் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக சிறுவயதில் அனுப்பி வைத்த மனஉறுதி வியக்க வைக்கிறது.
பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழுவயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோதுதான் எதிர்கொண்டான்.ஆனாலும் அவன் மனம் தளரா மாமனிதனாய் திகழ்ந்தான்.”நொந்தது சாகும்” என்று உணர்ந்த உத்தமன் பாரதி.
தோல்வியில் கலங்கேல்
........................................................
தோல்வியின் தோளில் ஏறி நின்றுகொண்டு வெற்றியின் வரலாற்றினை எழுதியவன் மாகவிஞன் பாரதி.
‘’மனதில்உறுதி வேண்டும்’’ என்ற வரிகள் அவன் பட்டஅடிகளில் இருந்து பிறந்ததைக் காணமுடிகிறது. ரசிக்கும்மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது.
ஆங்கிலேயரின் கொடுமையால் வணிகம் இழந்து நட்டப்பட்டு நின்ற சின்னசாமி ஐயர் துயரக்கடலில் வீழ்ந்தார். இதனால் உள்ளம் குன்றித் தளர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார். ஐந்து வயதில் தாய் இறந்துபோனாள்,

. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார் பாரதியார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:
தந்தைபோயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
    
தரணி மீதினில் அஞ்சல் என்பார்இலர்;
சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்
    
திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?
    
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?
(சுயசரிதை: 46)

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே தந்தையின் இறப்பு அவரை நிலைகுலைய வைத்தது.எட்டயபுரம் வீட்டை அடகுவைத்தாவது பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற பாட்டி பாகீரதிஅம்மையாரின் நெஞ்சுரம் நமக்கு நம்பிக்கை எனும் செய்தியைத் தருகிறது.
‘’கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’’ என்ற அவ்வையாரின் வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை.
காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் அவன் வாய்ப்புகளைத் தனதாக்கிக்கொண்டான்.அதனால்தான் திருநெல்வேலி மதிதா பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.
     தேடிச் சோறு நிதந் தின்று பல
       சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
       வாடித் துன்பமிக உழன்று பிறர்     
       வாடப் பலசெயல்கள் செய்து நரை
       கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
       கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல
       வேடிக்கை மனிதரைப் போலே நான்
       வீழ்வேனென்று நினைத்தாயோ?
சிறு துன்பங்களுக்கும் விதியை நொந்துகொள்கிற நமக்கு மகாகவி பாரதி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் “குன்றென நிமிர்ந்துநில்”  என்பதுதான்.
*கட்டுரையாளர் பாரதப்பிரதமரிடம் தேசியவிருது பெற்றவர்,தமிழ்த்துறைத்தலைவராக திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பணிபுரிகிறார்.