Sunday, March 22, 2015

சாதிக்கத் துடிக்கும் உங்கள் வெற்றிவாசகம் என்ன?




முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி.

mahabarathi1974@gmail.com,9952140275

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?தோல்வியின் தோள்களில் தொங்கிக் கொண்டு,வெறுமையை மட்டுமே தொடர்ந்து நான் சந்தித்து வருகிறேன்..வெற்றி எனக்கு வெறுங்கனவாய் போகுமோ? என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. 

அடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான்போல,எரிந்துபோனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளிஎழுவதல்லவா வாழ்க்கை! யாருக்குதான் துயரமில்லை..துயரமின்றி உயரமில்லை..துன்பமின்றி இன்பமில்லை..அடிகளால் அனுபவங்கள் கிடைக்கின்றன,அனுபவங்கள் நமக்கு ஆசானாகின்றன.தண்ணீரில் மிதக்கும் கப்பலை சிறுதுளை வழியே உள்நுழையும் தண்ணீரே கவிழ்க்கிறது.நாம் நம் மனதிற்குள் அனுமதிக்கிற கவலைகள்தான் நம்மைக் கவிழ்க்கின்றன.

 வெற்றி என்பது வெற்றுச்சொல்லன்று,சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரமுமன்று,மெய்வருத்தம் பாராமல்,மேனிநலம் பேணாமல்,பசிநோக்காமல் கண்துஞ்சாமல்,தோல்விகளைக்கண்டு அஞ்சாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் அருஞ்செயலின் விந்தைவிளைவே வெற்றி.ஒருநாள் இரவில் உருவாகி மறுநாள் சிகரம் தொடும் நிகழ்வுமன்று.வெற்றி என்பது பெற்றுக்கொள்வதென்றால் தோல்வி என்பது கற்றுக்கொள்வது.வென்ற நிமிடங்களில் நாம் நம்மை மிக உயர்வாக நினைத்து அகந்தை கூடக் கொண்டிருக்கலாம்.ஆனால் தோற்ற நிமிடங்களில்தான் காரணம் தேடி உள்நோக்கிச் சிந்திக்க வைத்ததை மறக்க முடியுமா?

 செயற்கரிய சாதனைகள் செய்யத் தயாரா நீங்கள்?அப்படியானால் கடந்தகாலத் தோல்விகளைக் கண்டு மனம் வருந்தாமல், உங்கள் வெற்றிவாசகம் என்ன என்று சிந்தித்தீர்களா?சில வெற்றியாளர்களின் பெயரைக் கேட்டவுடனே அவர்களின் வெற்றிவாசகம் நம் நினைவுக்கு வருகிறதே!

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
....................................................................
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்றதும் “கனவு காணுங்கள்”என்ற வெற்றிச்சூத்திரம் நம் மனதை வருடுகிறதே! தமிழகத்தின் ராமேஸ்வரம் எனும் சின்னஞ்சிறுதீவில் பிறந்து தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய்,ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா? ‘கனவுகாணுங்கள்’ என்று கூறி எங்களைத் தூங்கச் சொல்கிறீர்களா? என்றொரு மாணவி அவரிடம் கேட்டார்,அதற்குக் கலாம் அவர்கள்,”தூங்கும்போது வருவதல்ல கனவு,எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே கனவு” என்ற அவரது பொன்மொழி நினைவுக்கு வருகிறதே! நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும் அற்புதக்கண்கள் உள்ளன? இரண்டு சூரியன்களை நம் இமைக்குள்ளே இருத்துக்கொண்டு இருளில் இருப்பதாய் இனியும் சொல்லத்தான் வேண்டுமா?

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
...............................................................
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்றவுடன் “நம்பு தம்பி நம்மால் முடியும்” என்ற வாசகம் நினைவுக்கு வருகிறதே! வேதியியல் பேராசிரியராகத் தன்பணியைத் தொடங்கி,அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றித் தன்னம்பிக்கைத் தத்துவத்தைப் பிரபலப்படுத்த ‘மக்கள்சக்தி இயக்கம்’ என்ற இயக்கத்தின் மூலம் இளையசமுதாயத்தை மனஉறுதி உள்ளவர்களாக மாற்றிச் சென்ற மகத்தான மனிதர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் வெற்றிவாசகம்,“நம்பு தம்பி நம்மால் முடியும்” என்பதுதானே.அவரது தன்னம்பிக்கை கண்டு வியந்துபோன கமல்ஹாசன்,உன்னால்முடியும்தம்பி என்ற நம்பிக்கைத் திரைப்படத்தை உருவாக்கி அப்படத்தின் கதாநாயகனுக்கு உதயா என்று பெயர்சூட்டி மகிழ்ந்தாரே!

மாமேதை சாக்ரடீஸ்


....................................................
 உலகின் மாவீரன் அலெக்ஸ்சாண்டர்,கிரேக்க நாட்டின் “டெல்பி” கோவிலுக்குள் சென்று உலகத்தின் ஒப்பற்ற தத்துவ ஞானி யார்? என்று கேட்டபோது “சாக்ரடீஸ்.. சாக்ரடீஸ். சாக்ரடீஸ்” என்று மூன்றுமுறை அசரிரி வந்ததாம்.அந்தஅளவுப் புகழ்பெற்ற கிரேக்க மேதை சாக்ரடீஸ்,தன்னைச் சந்திக்க வந்த இளையோரிடம் சொன்ன வெற்றிவாசகம் என்ன தெரியுமா? “உன்னையே நீ அறிவாய்” என்பதுதான்.ஹெம்லக் எனும் கொடிய விஷத்தை அருந்தும் வினாடிவரை சாக்ரடீஸ் கற்றுக்கொண்டே இருந்தார்.நம்மில் எத்தனைப் பேருக்கு நம்மைப்பற்றித் தெரியும்? “உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால்  உலகத்தில் போராடலாம்.மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்..ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப்புகழ வேண்டும்”என்று கவியரசர் கண்ணதாசன் பாடியதை நாம் பொருள் உணர்ந்தோமா?

ஷிவ்கேரா
.......................
“உங்களால் வெல்ல முடியும்” என்ற தன்னம்பிக்கை நூலின் ஆசிரியரான ஷிவ்கேராவின் வெற்றிவாசகம் “தன்னம்பிக்கை உடையவன் தனிமனித ராணுவம்”என்பதுதானே.வெற்று மனத்தை வெற்றிமனமாக்கும் வித்தை நம்மிடம்தானிருக்கிறது.
”தீதும்நன்றும் பிறர்தரவாரா” என்ற நம்பிக்கை வாசகத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்திருக்கிறது புறநானூறு எனும் சங்கஇலக்கியம்.

மகாகவி பாரதி
.................................
நம் அனுமதியின்றி எவரும் நம்மைச் சிறுமைப்படுத்திவிட முடியுமா?.துன்பச்சுழலில் நின்றுகொண்டு “பெரிதினும் பெரிதுகேள்” என்று மகாகவிபாரதியால் எப்படி இறவாக் கவிதைகள் படைக்கமுடிந்தது? தாயும் இல்லை,தந்தையும் இல்லை,படிக்கவசதியும் இல்லை.ஆனாலும் வருத்தம் ஏதுமில்லை..காசிக்குச் சென்று அத்தை வீட்டில் தங்கிப்பயின்று பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் கற்று,தமிழாசிரியராய் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி,சுதேசமித்திரன்,சக்ரவர்த்தினி,இந்தியா,சூரியோதயம் என்று எத்தனையோ இதழ்களில் பணிபுரிந்து வாழ்க்கைப் புயலில் சிக்கி உணவுக்கே வழியில்லாமல் வாழ்ந்தபோதும் “மனதில் உறுதி வேண்டும்”என்று கவிபாட முடிந்ததே! உலையில் போடப் பக்கத்து வீட்டில் அரிசிவாங்கி செல்லம்மாபாரதி வைத்திருக்க,முற்றத்தில் இறைத்த மகாகவி பாரதி,”காக்கை குருவி எங்கள் சாதி..”என்று பாடினானே.பாரதியின் அனைத்துக் கவிதைகளும் உற்சாக ஊற்றுதானே.

கரிசல்காட்டுப் படைப்பாளர் கி.ரா.

..........................................................................
கோவில்பட்டிக்கு அருகில் உள்ள மிக எளிய கரிசல் காட்டுகிராமமான இடைசெவல் எனும் கிராமத்தில் பிறந்து புதுவைப் பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியரானது எப்படி? ஐந்தாம்வகுப்புப் படித்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற எழுத்தாளரானது எப்படி? அவரது கதைகள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது எப்படி? கரிசல் அகராதி கி.ரா.வின் வாழ்நாள் சாதனையாய் போற்றப்படுகிறதே எப்படி? அய்யா நீங்கள் பள்ளிசென்ற அனுபவம் எப்படி?, என்று கேட்டபோது கி.ரா.வேடிக்கையாகச் சொன்னார் ”நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன்.ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டேன்.”படிப்பிற்கும் மேலே அவர் எதோஒன்றைப் படித்திருக்கிறார்.”மண்ணைப் போற்று..மண் நம்மைப் போற்றும்” என்பதுதானே தொண்னூறு வயதைக் கடந்தும் அவர் சொல்லும் நம்பிக்கைச் செய்தி.

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி

.......................................................................
மதுரையின் நெருக்கடியான மேலக்கோபுரவாசல் அருகிலுள்ள அனுமந்தராயன் கோவில் தெருவில் உள்ள மிகச்சிறிய வீட்டில் பிறந்து ஐந்தாம்வகுப்பு வரை பயின்று,பதினைந்து வயதில் கர்நாடக சங்கீத மேடைகளில் இசையரசியாக வலம்வந்து 1966 அக்டோபரில் சர்வதேச ஐக்கியநாடுகள் சபையில் பாடிமுடித்தபின் உலகநாடுகளின் தலைவர்கள் எழுந்துநின்று கைதட்டும் அளவிற்குப் பெரும்பாராட்டைப் பெற்ற மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற எம்.எஸ்.அம்மாவின் “குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா”பாடக்கேட்டு, நெகிழாதவர்கள் யார்?திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் செல்லும் பக்தர்களையெல்லாம் கையில் தம்புராவோடு இன்றும் எம்.எஸ்.அம்மா சிலையாகப் பார்த்துக்கொண்டிருப்பதன் பொருள் என்ன?1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகஉயர்ந்த விருதான பாரதரத்னா விருது எம்.எஸ்.அம்மாவுக்கு வழங்கப்பட்டதே! “இந்த இசையரசிக்கு முன்னால் நான் சாதாரணப் பிரதமர்தானே” என்று பண்டித ஜவகர்லால் நேருவே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஆற்றலைப் போற்றினாரே! இதன் உட்பொருள்,திறமையை வளர்த்துக் கொண்டு ஒரே துறையில் விடாது உழைத்தால் உலகம் போற்றும் சாதனையாளராகலாம் என்பதுதானே.”இசையே உயிர்மூச்சு” என்பது பாரதரத்னா எம்.எஸ்.அம்மாவின் வெற்றிவாசகம்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசன்

...................................................................
மகாபாரதக் கர்ணனை நாம் கண்டதில்லை,“உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்று பாடி மண்ணில் சாய்ந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நமக்குத் தெரிந்த கர்ணன்.திருவருட்செல்வரில் அப்பர் பெருமானாக,திருவிளையாடலில் சொக்கநாதக்கடவுளாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக,ராஜராஜசோழனாக,கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாராக,மகாகவி பாரதியாராக நடித்து,நடிப்பின் இமயமாகத் திகழ்ந்து இந்திய அரசின் பத்மபூஷன்விருது,தாதா சாஹேப் பால்கே விருது,செவாலியே விருது என்று அடுக்கடுக்காய் விருதுகள் பெற்ற அந்தச் சாதனை மனிதர் சந்திக்காத தோல்விகளா? ஆனாலும் எல்லாவற்றையும் துணிச்சலோடு அவர் எதிர்கொண்டார். “களைப்பில்லா உழைப்பு” சிவாஜிகணேசனின் வெற்றிவாசகம்.
பல்லி வாலை இழந்தாலும் தன் வாழ்வை இழப்பதில்லை,ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் ஈசல் தன்னை நொந்துகொள்வதில்லை,ஆம்! ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல்.சிறுநிகழ்வுகளுக்கெல்லாம் மனதொடிந்து போகாமல் எதிர்நின்று எதிர்கொள்வதற்கு மனத்துணிவை வளர்த்துக்கொள்வோம்.முடியலாம் முடியாமலும் போகலாம் ஆனாலும் முயல்வதிலிருக்கிறது வெற்றியின் முடிவு.நமக்கான வெற்றி வாசகத்தை இன்றே உருவாக்கி நம் மனதின் வலிமையால் அவ்வாசகக் கனவை நிஜமாக்குவோம்.ஒருநாள் வானம் நமக்கு வசப்படும்.

No comments:

Post a Comment